05 August 2014

கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்புகள்

கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்புகள்
கார்த்திகேயன்


வேதகாலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது. இது "ஏழு நட்சத்திரங்களின்'' கூட்டமாகும். அவை "அம்பா, துலா, நிதத்னி, அப்ரயந்தீ, மேகயந்தீ, வர்ஷயந்தீ, சுபணீகா'' என்ற பெயர்களையுடையது. 


தேவர்கள் "அம்பா, துலா'' முதலிய மந்திரங்களைக் கூறி இக்கிருத்திகை நாளில் கற்களால் அக்னிசயனம் செய்து சுவர்கத்தையடைந்தனர்'' என்று வேதம் மிகப் பெருமையாக விளக்குகிறது. ஆதானம் என்று ஒரு கர்மா. 

இந்தக் கர்மாவினால் கார்ஹபத்யம், ஆஹவனீயம், தஷிணாக்னி என்று மூன்று அக்னிகளை உண்டு பண்ணி அவைகளை உயிரோடு இருக்கும் வரையில் காப்பாற்றி உபாஸனை செய்து வர வேண்டும் என்பது வேதத்தில் கூறப்படும் விதி. 

இந்த ஆதானம் என்பது யக்ஞ கர்மங்களில் முதன்மையானதாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் அக்னியை ஆதானம் பண்ண வேண்டும். அது அக்னியின் நட்சத்திரம் என்றும், அதுவே நட்சத்திரங்களுக்குள் முகம் போன்றது என்றும் வேதம் கூறுகிறது. 

அதற்குக் காரணமும் காட்டுகிறது. "மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும். ஆனால் கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால், அந்த நட்சத்திரத்தில் ஆதானம் செய்யும் ஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்'' என்பது கருத்து. 

இவ்வளவு பெருமை வாய்ந்தது "கிருத்திகை'' நட்சத்திரம் என்றாலும் இதற்கு முதன்மை தரப்பட்டதற்கும் ஒரு காரணம் காட்டப்படுகிறது. "இந்தக் கிருத்திகைகள் கிழக்குத் திசையிலிருந்து விலகிச் செல்வதில்லை. மற்றவைகளோ கிழக்கிலிருந்து விலகிச் செல்கின்றன'' என்று மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது வேதம். எனவே வேதகாலத்தில் கால நிர்ணயம் செய்வதற்கும் கிருத்திகை மூலகாரணமாக இருந்தது.

No comments:

Related Posts with Thumbnails