20 October 2010

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்-[ அனுஷம் -Anusham]


ஸ்தல வரலாறு: 

ஜமதக்னி மகரிஷி, தன் மனைவி ரேணுகா, கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமனும் தாயை வெட்டினார். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவரை உயிர்ப்பித்தார். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னியும் இந்த பாவத்துக்கு விமோசனம் வேண்டி சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்றும், அம்மன் உலகநாயகி  என்றும் அழைக்கப்படுகின்றனர். மகாலட்சுமி வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர் என்று பெயர் பெற்றது.

சிறப்பம்சம்: 

சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன் இத்தலம் வழியாகவே சென்று திரும்புவான்.ஒருசமயம் அவன் இத் தலத்தை கடந்து சென்றபோது, காவலாளிகள் கொண்டு சென்ற தீவட்டி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது, அது தானாகவே எரியத்துவங்கியது. தினமும் இவ்வாறு நடந்தாலும், இதற்கான காரணத்தை மன்னனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா எனக் கேட்டான். அவன், மன்னரே! இந்தப்பகுதியில் லிங்கம் ஒன்று உள்ளது. அதில் நான் மேய்க்கும் பசுக்களில் சில தானாகவே பால் சொரிகின்ன, என்றான். மன்னனும் அவ்விடம் சென்று சிவலிங்கத்தை கண்டான். அதனை வெளியே எடுக்க எடுத்த முயற்சி தோற்றது.

எனவே, அந்த இடத்திலேயே அனுஷம் நட்சத்திர தினத்தில் பிரதிஷ்டை செய்தான். பிற்காலத்தில் கோயிலும் உருவானது.நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. எனவே, அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரியபாண வடிவிலும், அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் உள்ளன. இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி நோன்பு அன்றும் இந்தசிவனுக்கு சந்தனக்காப் பிட்டு, அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

அனுஷம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: 

உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் வீற்றிருப்பர். அரசாங்கத்தில் பாராட்டு பெறும் யோகமுண்டு. பிறர் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ஊர் ஊராகச் சுற்றும் குணம் கொண்ட இவர்கள், பிறரிடம் மனம் விட்டுப் பேச மாட்டார்கள்.


பிரதான தேவதை[ Pradhana Devatha] :மித்ரன்[Mithra].
அதி தேவதை [Ati Devatha]  :
லக்ஷ்மி[Lakshmi]






இருப்பிடம்: 

மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

திறக்கும் நேரம்: காலை 6 - 11 மணி , மாலை 4 - இரவு 8 மணி

போன்:+91 - 4364 - 320 520.

No comments:

Related Posts with Thumbnails