21 October 2010

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் - [ உத்திரட்டாதி - Uttaraproshtapada]


ஸ்தல வரலாறு : 

திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு லிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை ஒரு பூ குறைந்தது. எனவே, தன் கண்ணையே ஒரு மலராக்க நினைத்து, அதை எடுக்க முயன்றபோது, சிவன் அவர் முன் தோன்றி தடுத்தார். இதையறிந்த லட்சுமிக்கும், சிவதரிசனம் பெறும் எண்ணம் ஏற்பட்டது. அகத்தியரின் ஆலோசனையின்படி, பூலோகம் வந்து, ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை பூஜை செய்தாள். இவளது பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதனால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார். சகஸ்ரம் என்றால் ஆயிரம்.

சிறப்பம்சம்: 

தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க, உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்வதாக ஐதீகம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில், இங்கு வந்து ஹோமம் செய்து சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் செய்கிறார்கள். இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட செயல்பாடுகள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.

பெயர்க்காரணம்: 

தீயாகிய அக்னிபகவானும், அயனாகிய சூரிய பகவானும் இங்கு ஹோமம் செய்து சிவனை வழிபட்டதலமாதலால், இவ்வூர் தீயத்தூர் ஆனது. அக்னி வழிபட்ட தலமாதலால், உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தீர சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள். கடன் பிரச்னை தீரவும், செல்வம் செழிக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இத்தலத்து பிரகன்நாயகி அம்பாளை வழிபடுகின்றனர். சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். பிரகாரத்தில் விநாயகர், நந்தி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, நாகர், வள்ளி தெய்வானை சமேத
முருகன், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. வாஞ்சா கணபதி தனி சன்னதியில் உள்ளார்.லட்சுமி பூஜை செய்த சிவன் என்பதால், இத்தலத்தை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: 

வாக்குவன்மை கொண்ட இவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவர். ஆடை ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் இருக்கும். முன்கோபம் இவர்களின் இயல்பாக இருக்கும். தெய்வீக விஷயங்களில் நாட்டம் கொண்டிருப்பர். பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் இவர்கள், தனது கடமைகளில் திறமையோடு ஈடுபடுவர்.

பிரதான தேவதை [Pradhana Devatha] : அஹிர்புத்னயர் [Ahirbudnia]
அதி தேவதை [AtiDevatha] : காமதேனு [Kamadhenu]    

இருப்பிடம்: 

புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூரை அடையலாம். தூரம் 120 கி.மீ.

திறக்கும் நேரம்: காலை 6- மதியம் 12 மணி

போன்:+91 - 4371-239 212  99652 11768

No comments:

Related Posts with Thumbnails